Friday 17 April 2020

வ சுப.மாணிக்கனார்


'தோன்றிற் புகழோடு தோன்றுக'' எனும் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். தமிழிலக்கிய உலகில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்மொழியை உணர்வு மொழியாகவும், சிந்தனை மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் போற்றியவர். புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் வாழ்ந்த வ.சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் 17.4.1917 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தவர்.
"அண்ணாமலை' என்ற தம் இயற்பெயரை, மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டால், "மாணிக்கம்' என மாற்றிக் கொண்டார் எனச் சொல்லப்படுகிறது.
இளம் வயது முதலே பிள்ளைகளுக்குத் திருக்குறள், திருவாசகம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலிய இலக்கியங்களைப் பிழையின்றி தகுந்த ஒலிப்புமுறையுடன் சொல்லிக் கொடுப்பாராம். அத்துடன் திருக்குறளில் ஓர் அதிகாரத்தை முழுதும் மனப்பாடமாகப் படித்து ஒப்புவித்தாலோ அல்லது பிழையின்றி எழுதிக் காட்டினாலோ பத்து முதல் இருபது பைசா வரைக் கொடுத்து ஊக்கப்படுத்துவாராம்.
ஒருமுறை காரைக்குடியில் இல்லத்தின் ஓர் அறையில் வ.சுப.மா., ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, கொசு ஒன்று அவரது தோள்மீது அமர்ந்து குருதியைக் குடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்டுவிட்ட அவருடைய மகள் தென்றல், அந்தக் கொசுவை அடித்து அப்பாவிற்கு நன்மை செய்து விட்டதாக நினைத்து அவரின் பாராட்டை எதிர்பார்த்து நின்றிருந்தாராம். அப்போது
வ.சுப.மா., ""படிப்பதில் கவனம் இருக்கும்போது கொசு கடிப்பது எப்படித் தெரியும்? நீ எனது தோளில் அடித்ததால் என் சிந்தனையோட்டம் தடைப்பட்டுவிட்டது'' என்று கடிந்து கொண்டாராம்.
படிப்பதையும் எழுதுவதையும் வ.சுப.மாணிக்கனார் ஒரு தவமாகவே செய்து வந்திருக்கிறார். எல்லோரும் உறங்கிய பின் உறங்கி, அவர்கள் விழிக்கும் முன் விழித்து தமது கடமைகளைச் செம்மையுடன் செய்ததன் விளைவாகத்தான் கம்பர், வள்ளுவர், அகத்திணை ஆராய்ச்சி (தமிழ்க்காதல்), இலக்கியச்சாறு, கொடை விளக்கு, நெல்லிக்கனி, மாமலர்கள், மாணிக்கக்குறள், மனைவியின் உரிமை, உப்பங்கழி, தலைவர்களுக்கு உலக முரசு, இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப்பட்டயங்கள், தற்சிந்தனைகள் முதலிய முப்பதுக்கும் மேலான நூல்களை அவரால் எழுத முடிந்திருக்கிறது. இந்நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் 2007ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய போது இவரின் தமிழ்ப் புலமையைக் கண்ட அரசர் முத்தையவேள் செட்டியார் 1970இல் தமது அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு அழைத்து தலைவர் பொறுப்பை அளித்துப் பெருமைப்படுத்தினார். ஏழு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் செய்த தமிழ்ப்பணிகள் இன்று விருட்சங்களாய் வளர்ந்து நிற்கின்றன.
சங்கப் பாக்களின் நுட்பங்களையெல்லாம் கட்டுரைகளாக வடித்தவர். பிசிராந்தையார், "யாண்டு பலவாக' என்று தொடங்கும் புறப்பாடலில், "மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்' என்று குறிப்பிட்டிருப்பார். இதில் வரும் "ஒடு' என்ற சிறு சொல் மனைவி ஒருத்தி, மக்கள் பலர் எனப் பிரித்துப் பொருள் தருவதாக அமைகிறது. இச்சொல் இடம் பெறாதிருக்குமானால் மனைவியும் பலர், மக்களும் பலர் எனப் பொருள் மாறுபட்டிருக்கும் என்பதனை வ.சுப.மாணிக்கனார் சுவையுடன் தெளிவுபடுத்துவார்.
இவர் உரைநடையில் கையாளும் சொல்லாக்கங்கள் பல அரியவை.""காற்று எனும் சொல் மக்கள் வழக்கிற்குரியது என்றும், வளி என்னும் சொல் இலக்கிய வழக்கிற்குரியது என்றும் பலர் கூறுவார்கள். ஆனால், பொதுமக்கள் சூறாவளி என்னும் வழக்கில் வளி என்னும் சொல்லினை மிக எளிதாகப் பயன்படுத்துகிறார்கள்'' என்று "இலக்கிய விளக்கம்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
வ.சுப.மாணிக்கனார் எதையும் புதிய நோக்கில் சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர். "எந்தச் சிலம்பு?' எனும் நூலில் கண்ணகியின் சிலம்புதான் சிலப்பதிகாரம் என்று பெயர் இடுவதற்குக் காரணம் எனப் பலரும் கூறிவரும் நிலையில், இவரோ பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பாண்டிமா தேவியின் சிலம்புதான் நூல் பெயர்க்குக் காரணம் எனக் கூறுவது புதுமை.
முந்நீர் என்பது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் எனும் மூன்றும் நிறைந்த கடலைக் குறிக்கும் சொல் என்பது புறநானூற்று உரையாசிரியர்களின் கருத்து. முந்நீர் எனும் சொல் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூவகைச் செயல்பாடுகளையும் குறிப்பது என்பது அடியார்க்குநல்லாரும், நச்சினார்க்கினியரும் கூறும் கருத்து. இவ்விரு கருத்துகளையும் மறுத்து வ.சுப.மாணிக்கனார், ""முந்நீர் எனும் சொல் முப்புறம் தமிழகத்தை வளைத்துக் கிடக்கும் ஒரு பெருநீர்ப்பரப்பைக் குறிப்பது என்பதனையும், தீபகற்பமாகிய நிலவடிவைச் சுட்டுவது என்பதையும் இடைக்கால உரையாசிரியரெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை'' (தமிழ்க்காதல், ப.152) என்று குறிப்பிடுகிறார்.
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரின் மாணவர் என்கிற தனித்த அடையாளம் வ.சுப.மாணிக்கனாரிடம் எப்போதுமுண்டு. தமது இல்லத்திற்குக் "கதிரகம்' என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
அவரது எழுத்தும் பேச்சும் தமிழ்நலம் சார்ந்தவையாகவே இருந்தன. தமிழ் வழிக் கல்விகாகப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். எத்தனை இடர்வரினும் நடுவுநிலையோடு நின்று உண்மையின் அடையாளமாய்த் திகழ்ந்தவர். எழுத்திலோ, பேச்சிலோ எவர் பிழை செய்யினும் நெஞ்சுரத்துடன் உடனே வெகுண்டெழுந்து நேருக்கு நேர் சுட்டிக்காட்டும் இயல்பினர்.
ஒவ்வொரு மனிதரும் ஒரு குறிக்கோளுடன் வாழவேண்டும் என்பதே வ.சுப.மா. வின் வேண்டுகோள். கவர்ச்சி தரக்கூடிய கேளிக்கைப் பேச்சுகளில் பொழுதைக் கழிப்பதை விடுத்து சங்க இலக்கியம், திருக்குறள், திருவாசகம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், ஆத்திசூடி உள்ளிட்ட உயர்வான நோக்குடைய இலக்கியங்களைக் கற்று வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் என்பதே வ.சுப.மா. வின் கருத்து. ஒரு நூற்றாண்டைக் கடந்தும் (24.4.1989) தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நின்று வாழும் வ.சுப.மாணிக்கனார், தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஏற்றிய ஒளி கலங்கரை விளக்கமாய் என்றும் அணையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழின் மறுவுருவாய் வாழ்ந்து மறைந்த மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவைப் பலரும் சிறப்பாகக் கொண்டாடி வரும் நிலையில், தமிழக அரசு அவருக்கென தனியொரு நினைவிடம் அமைத்து, விழாவெடுத்து, சிறப்பு செய்தால் தமிழ்கூறும் நல்லுலகம் பெருமை கொள்ளும். அந்நாள் எந்நாளோ?

இன்று: வ.சுப.மாணிக்கனாரின் (17.4.1917) பிறந்த நாள்

Thursday 16 April 2020

கழுத்துரு / கழுத்திரு

கழுத்துரு / கழுத்திரு 
 
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின்  திருமங்கலநாண்  (தமிழில் தாலி வடமொழி கலப்பில்   திரு மாங்கல்யம் ) கழுத்துரு அல்லது கழுத்திரு எனப்படும்.

மணமகளின் கழுத்தில் உருக்கொண்டிருப்பதால் கழுத்துரு 

மணமகளின் கழுத்தில் 
திருவாக இருப்பதால்   கழுத்திரு  

மணமகளின் கழுத்தில் மணமகன் திருவாகிய திருமங்கலநாணை, கடைமணிகளில்   இருந்து வரும் புற (வெளி) அக (உள்) நாண்களின்(தாலிக்கயிறுகளின்) இருமுனையையும்     குச்சி,, தூம்பு(தும்பு ) இடை,,  துவாளை(தூவாளை);  இட்டு  பூட்டுவதால் திருப்பூட்டுதல்.

இலக்குமி ஏத்தனம் -௧ 1 
ஏத்தனம் -௪ 4 திருமங்கலம்(திருமாங்கல்யம்)-௧ 1 
உரு. ௧௯ 19 ,
சரிமணி. ௪ 4 
கடைமணி   ௨ 2 
துவாளை(தூவாளை) ௧ 1 ,
 குச்சி;;;;; ௧ 1 ,
தும்பு (தூம்பு) ௧ 1 
ஆக,, திருமங்கல நாணின் உருப்படிகள்(பாகங்கள்)௩௪ 34.

 முப்பத்திநான்கின் தமிழ் பெயர் விளக்கமும் பின் அதன் வடிவமைப்பின் உள் பொதிந்த செய்தியும்காண விழைந்ததன் விளைவு.

இலக்குமி ஏத்தனம். ௧ 1

நகரத்தார் ஆசிவகம் ,,சமணம்,,சைவம் ஆகியவற்றை பின்பற்றி வந்து இன்று சைவத்தில் நிலை கொண்டுள்ளார்கள். ஆசிவகத்தில் வந்த இருயானை நான்கு கைகளுடன்கூடிய இலக்குமியே அவர்தம் இல்லங்களின் நுழைவாயிலிலும்,,முகப்பு,சாமி வீட்டு நிலைகளிலும் இருக்கும் .இது இலக்குமியை ஈர்க்கும் கருவியாகும். எனவே இது மணமகன் செய்யும் வணிகத்தில்,, இலக்குமியை ஈர்க்க புறநாணில்(வெளிக்கயிற்றில்) நடுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

 ஏத்தனம். ௪ 4

இச் சொல்லுக்கு தமிழ் அகராதியில் கருவி,,பாத்திரம் என இருபொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது.புறநாணில்(வெளிக்கயிற்றில்)உள்ள இரு ஏத்தனம் மணமகனின் கைகளையும்,, அக நாணில் (உள்கயிற்றில்) உள்ள இரு ஏத்தனம் மணமகளின் கைகளையும் குறிக்கின்றன .

திருமங்கலம் (திருமாங்கல்யம்) ௧ 1

இது அக நாணில் (உள்கயிற்றில்) நடுவில் வருமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.இதன் வடிவமைப்பு வள்ளுவரின் ///// மங்கலம் என்ப மனைமாட்சி/////என்பதை காட்டுவதுபோல் வீட்டின் கடகால் (அஸ்திவாரக்கால்) இரண்டு ,, வாசல்,, கூரைஆகியவற்றோடு நீள் சதுரமாக வீடு வடிவில் ,, வாசலின் உள்நோக்கினால் இலக்குமி இருப்பதாக இருக்கும் .

௧௯ 19 ,

உரு = வடிவம். நிறம், பாட்டு, அச்சம், பொருள், மந்திரம் என தமிழில் பொருள் கூறப்பட்டுள்ளது.மேலும் /////உரு ஏற திரு ஏறும் திருமூலர்///// திருமந்திரம் இயற்றிய சித்தர் வாக்கு,,இப்படிப்பட்ட உரு ௧௧ 11 புறநாணில்(வெளிக்கயிற்றில்) ௮ 8 அக நாணில் (உள்கயிற்றில்) அமைக்கப்பட்டிருக்கும் .

சரிமணி. ௪ 4 ,

இது வலம்,இடம்  பக்கத்திற்கு இரண்டாக அக நாணிலும்,,புறநாணிலும் கடைமணி நடுவிருக்க  அமைந்து,,  இருநாணும் சரிந்து உரசிக் கொள்ளா வண்ணம் பார்த்துக்கொள்ளும் பணியை செய்வதால்,, இது சரிமணி எனப்படுகிறது.

கடைமணி  ௨ 2 ,

இது அக ,புற நாண்களின் கடைசியில் வலம் இடம் பக்கத்திற்கு ஒன்றாக  அமைவதால் கடைமணி எனப்படுகிறது.

துவாளை(தூவாளை) ௧ 1

புறநானூறு - 334. தூவாள் தூவான்!

பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 

காகரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. னூரே மனையோள்5பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் .. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய,10உரவேற் காளையும் கைதூ வானே. 

மன்றத்தில் விளையாடும் சிறுவர்களின் ஆரவார ஒலியைக் கேட்டதும் முயல் படப்பையில் ஒடுங்கிக்கொள்ளுமாம். அந்தச் சிறுவர்கள் விளையாட்டு மண்டை கொண்டவர்கள். முயல் பழனத்தில் விளைந்திருக்கும் கண்புப் புல் போன்ற மயிரினை உடையது. மனையோள் உணவு வழங்கும் அரவம் பாணரின் வயிற்றுப் பசியைப் போக்குவதாலும், நாடி வந்தவர்களுக்குப் பரிசில் வழங்குவதாலும் உணவு உண்ணும் அரவ ஒலியை உண்டாக்கும் மனைவி அந்த அரவ ஒலி உண்டாக்குவதைக் கைவிடவே மாட்டாள். காளை வழங்கும் அரவம் அந்த மூதில்லில் வாழும் காளை பகையரசன் யானையை வீழ்த்தி அது அணிந்திருந்த ஓடைப் பொன்னைத் தன் அரசனிடமிருந்து பரிசிலாகப் பெற்றுவந்ததைத் தன்னிடம் பரிசில் நாடி வந்தவர்களுக்கு வழங்குவதைக் கைவிடமாட்டான். 

தூவாளே என்ற சொல் பற்றிக்கொள்ளும் (பூட்டிக்கொள்ளும்) என்பதை குறிக்கிறது,,இதிலிருந்து தூவாளை    பிறந்து,,துவாளை என்று,,இந்த அணிகலன் பெயரும்  அதிலிருந்து மருவியிருக்கலாம்  ஏனெனில் இருநாணும் சேரும் இடத்தில் பூட்டின் அமைப்பை செயலாக்கும் மூன்றில் ஒன்றாக இது  இருக்கிறது.

குச்சி ௧ 1 ,

கழுத்துருவின்,,பெண்கழுத்தின் வலது நாணின் நுனியில் துவாளை,,இடது நாணின் நுனியில் குச்சி கட்டப்பட்டிருக்கும் .பருமனில் மிக்க குறைந்த கோலின் வடிவு குச்சி .

தும்பு (தூம்பு) ௧ 1

தும்பு எனில் தமிழில் நார்,,கயிறு ,என்றே பொருள் சொல்லப்பட்டிருக்கிறது தூம்பு என்பதற்கு குழாய் வடிவமுள்ள இசைக்கருவி,,நீர்த்தாரை ஆகியன குறிக்கப்படுகிறது.இந்த அணிகலன் நடுவில் குழாய் போன்றே வருகிறது எனவே இது தூம்பு ஆக இருந்து,,அதனுள் தும்பு (கயிறு) நுழைக்கப்படுவதால் நாளடைவில் மருவி தும்பு ஆகிவிட்டது.

உள்ளார்ந்த பொருள் ,செய்தி,தத்துவம் 

புறநாணில்(வெளிக்கயிற்றில்)
வணிகனின் இல்வாழ்க்கையில்,, வணிகம் சார்ந்த புற (வெளி)பணிகளை வணிகனான  மணமகன்,, இலக்குமி ஏத்தன(கருவி)துணையை  மனதில் உரு ஏற்றி,, பல உருவாக தன் இரு கைகள் எனும் ஏத்தனத்தால்(கருவியால்),, அறவழியில் செய்து திருவை (பொருளை) ஈட்டுதல்.

அக நாணில் (உள்கயிற்றில்)
மணமகள் கணவன் ஈட்டிய திருவை (பொருளை) தன் இருகை ஏத்தனம் (பாத்திரம்)கொண்டு சிந்தாமல் சிதறாமல் பெற்று அதை பல உரு ஆக்கி திருமங்கல (திருமாங்கல்ய)    இலக்குமியாய் அகத்தில் என்றென்றும் கொலு வீற்றிருப்பது..

கழுத்துருவில் அகம் புறப் பணிகள் யார் யாருடையதென தெளிவு படுத்தப்பட்டதுடன் -புறத்தில் ஆண் நாண்,, அகத்தில் பெண் நாண்,, என அமைத்ததும் மிக அறிவார்ந்த ஒன்று.

ஆண்,,பெண் இருபாலர் குறியீடாக கழுத்துரு (திருமங்கலமாகிய திருமாங்கல்யம்) இருப்பது ,,நம் முன்னோரின் சம பார்வையை அறிவுத்திறனை வெளிப்படுத்துகிறதன்றோ!! !!!!!

மேலும் நிறைவாக 
தற்காலத்தில் குச்சி ,,தும்பு,,துவாளை மூன்றும் திருப்பூட்டுதலின் போது கழுத்துருவில் இணைக்காமல் மணமகன் மூன்று முடிச்சை போடுகிறார்,,பின்னர் இம் மூன்றும் இணைக்கப்படுகிறது.

கழுத்துரு எனப்படும் கழுத்திரு பண்டைய காலங்களில்,, முன்பு கடற்கரை நகரமான பூம்புகார் போன்ற இடங்களில் வாழ்ந்தபோது இயற்கை பொருட்களான,,நண்டின் கால்களை பதப்படுத்தியும்,,முத்து,,பவளம் சேர்த்தும் செய்ததாகவும் பின்னர் உலோகங்களான-வெள்ளீயம்,,பித்தளை,,வெள்ளிக்குமாறி,,தற்போது நூற்றாண்டுகளுக்கு  மேல் தங்கத்தில் செய்துவருவதாகவும் இனப் பெரியவர்களால் சொல்லப்படுகிறது.

---இராமு இராமநாதன்.இராம.நா