Wednesday 8 October 2014

குழந்தைக் கவிஞர்" அழ.வள்ளியப்பா

மிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் என்ற சிறுகிராமத்தில் அழகப்ப செட்டியார்-திருமதி உமையாள் ஆச்சி ஆகியோருக்கு மகனாக அழ.வள்ளியப்பா 1922ம் ஆண்டு நவம்பர் 7ம்தேதி பிறந்தார்.
திரு .அழ.வள்ளியப்பா அவர்கள் (61வது வயது )சாந்தியின் போது



ராயவரத்தில் உள்ள எஸ்.கே.டி.காந்தி துவக்கப்பள்ளியில் தனது ஆரம்ப நிலைப் படிப்பைத் துவக்கினார். கட்டிடத்துக்கு எப்படி அஸ்திவாரம் முக்கியமோ அதுபோல கல்வி பயில்வதில் அரம்பக்கல்வி என்ற அஸ்திவாரத்தை ஆசிரியர்கள் இவருக்கு வசப்படுத்தினர். ராயவரத்திலிருந்து 4கி.மீ தூரத்திலுள்ள கடியபட்டி பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப்பள்ளியில் தனது உயர் நிலைக் கல்வியை பயின்றார். நாள்தோறும் தன் கிராமத்திலிருந்து சக மாணவர்களுடன் நடந்தே சென்று உயர்நிலை படிப்பை படித்துவந்தார்.

இவ்வாறு நடந்து செல்லும்போது ஒருநாள் அழகான பாடல் ஒன்றை சிறுவன் வள்ளியப்பா இயற்றினார். சகமாணவர்களிடம் அந்த எளிய பாடலைச் சொல்ல, அவர்களூம் உற்சாகமாக அதைப் பாட்டாகப் பாடியவாறே பள்ளிக்கு வந்தனர். இப்படி பாடிக்கொண்டே வந்ததில் தூரம் குறைந்து போனதாக உணர்ந்தனர் அனைவரும்! சகமாணவர்கள் தந்த உற்சாகம் எளிய வார்த்தைகளைக் கோர்த்து பாடல்களைப் புனைவதும் பாடும்போது பாடுவதற்கு சிரமப்பட்டால் அதனை மாற்றி அமைத்து தரப்படுத்துவதும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாடல் இயற்றும் திறனை வளர்த்துக்கொண்டார். பாடல்களில் எளியசொற்களைப் பயன்படுத்துவது முக்கியம் என்பதை அந்தப் பிராயத்திலேயே உணர்ந்த வள்ளியப்பா தனது வாழ்நாளில் கடைசிவரை இயற்றிய பாடல்களில் இதைக் கடைப்பிடித்தார்!

பாட்டு இயற்றும் இந்தத் திறமையை வளர்த்தெடுக்க பேரா.மதுரை முதலியார், திரு.இளவழகனார் மற்றும் இராசமாணிக்கனார் போன்றோரை அணுகி தம் பாட்டெழுதும் தாகத்தை வெளிப்படுத்த இந்த ஆன்றோர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டினர்!
சாதாரணக் குடும்பத்திலிருந்து சென்னை சென்று கல்லூரிப்படிப்பு என்ற எட்டாக்கனியை அடைவதில் சிரமப்பட்ட காலம் அவருடைய காலம்! அதனால் தன் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையை 400 கி.மீ. பயணித்து சென்னை நகரில் வேலை கிடைக்க அவர் பெற்ற மதிப்பெண்கள் துணையாக இருந்தது!

1940ல் திரு.அழ.வள்ளியப்பா சென்னைக்கு வந்தார். சென்னை பாரிமுனைப் பகுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் வசித்த பகுதியை தற்காலிக முகவரியாக கொண்டு எதையாவது சாதிக்கவேண்டும் என்ற வெறியோடிருந்த ஏராளமான இளைஞர்களோடு கரம்கோர்த்து எதிர்காலத்திற்கான நிரந்தரத் தீர்வை அடையும் முயற்சியில் இறங்கினார்.
சக்தி காரியாலயம் என்ற நிறுவனத்தில் காசாளராக முதன்முதலில் சேர்ந்தார். வேலையில் சேர்ந்துவிட்டாலும் தனது அபிலாசையான பாடல் புனைவதையும் இணையாக வளர்த்து வந்தார். கொஞ்ச காலம் கழித்து, 1941ல் இந்தியன் வங்கியில் எழுத்தராக இணைந்துகொண்டார்!
 
திருமதி.வள்ளியம்மை ஆச்சி 1944ம் ஆண்டு பிப்.4ம்தேதி இவருடைய வாழ்க்கையில் இணைந்த பொன்னான நாளாகும்! குடும்பம் என்ற சுமை வண்டியை மூச்சுத் திணறலோடு இழுக்க விடாமல் தன் பங்குக்கு திறம்பட நடத்தியதில் திருமதி வள்ளியம்மை ஆச்சிக்கு பெரும் பங்குண்டு! ஒவ்வொரு ரூபாயாக எண்ணிப்பார்த்துச் செலவழித்தாலும் சிக்கனமாகச் செலவழித்து அதிலும் சிறுகச் சிறுகச் சேமித்து குடும்பப் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்தார் என்றால் மிகையாகாது!

அலமேலு, அழகப்பன், கஸ்தூரி, உமையாள் மற்றும் தெய்வானை என்று அய்ந்து குழந்தைகளோடு இல்லம் நிரம்பியிருந்த நேரத்தில் குடும்பப் பொறுப்பை தன் தோளில் ஏற்றிக்கொண்டு குழந்தைகளுக்கான இலக்கியப் பணியை தம் கணவர் மேற்கொள்ள ஏதுவாக ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தார்!

1944-54 ஆண்டுகளில் தம்மை முழுமையாக குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளில் ஈடுபடுத்திக்கொண்டார்! "பால மலர்", "டமாரம்", "சங்கு", மற்றும் "பூஞ்சோலை", ஆகிய சிறுவர் இதழ்கலுக்கான கெளரவ ஆசிரியராகப் பணியாற்றினார்.

1950களில் திரு.வள்ளியப்பா அவர்களும் ஒரு சில குழந்தை எழுத்தாள நண்பர்களுமாகச் சேர்ந்து சிறார் எழுத்தாளர் அமைப்பை 1950ல் தோற்றுவித்தார்கள்! சக்தி வை.கோவிந்தன் இந்த அமைப்பின் முதல் தலைவர் ஆவார். இந்த அமைப்பானது சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு தமிழில் பாடுபட தங்களை அர்ப்பணித்துக்கொண்டது. தமிழ் மொழியில் சிறுவர் உரைநடையும் பாடல்களும் இடம்பெற இந்த அமைப்பு வெற்றிகரமான சிறார் இலக்கிய எழுத்தாளர்களது படைப்புகளை வெளிக்கொணர்ந்தது. இந்த அமைப்பில் பொதுச் செயலாளர், தலைவர் மற்றும் ஆலோசகராகப் பல்வேறு பொறுப்புகளில் திரு.அழ.வள்ளியப்பா வெகு சிறப்பாகச் செயல்பட்டார். 650க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான புத்தகங்களை வெளியிட்டது இந்த அமைப்பு!
 
"தென்னிந்திய மொழிகளின் புத்தக அமைப்பு" ஒன்றை ·போர்டு அறக்கட்டளை துவக்கி தென்னிந்திய மொழிகளில் புத்தகங்களை கொண்டு செல்ல திட்டமிட்டது. இது தொடர்பாக ·போர்டு அறக்கட்டளை நிர்வாகம் திரு.அழ.வள்ளியப்பாவை தொடர்புகொண்டு இந்தப் பணியில் ஈடுபட அழைப்பு விடுத்தது! இதனைத் தொடர்ந்து இந்தியன் வங்கி இதன் திட்ட அலுவலராய் நியமித்தது. திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் ஓராண்டுச் சேவையால் பெரிதும் கவரப்பட்ட ·போர்டு அறக்கட்டளை இன்னும் ஒருவருடம் இன்னும் ஒருவருடம் உங்கள் சேவை எங்களுக்குத் தேவை என்று சொல்லி 5 ஆண்டுகளுக்கு இந்தப் பணியை நீடித்தது! அவருடைய சேவையை எழுத்தில் வடித்துவிட இயலாது. சிறிதும் பெரிதுமான பல்வேறு திட்ட பணிகளைக் கையாள்வதில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் அயராத உழைப்பும் இன்றைக்கும் மதித்துப் போற்றப்படும் வகையில் அமைந்தது. சாகித்திய அகாதெமியின் டெல்லி புத்தக திருவிழாவில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பாளாராக இருந்ததோடு சர்வதேச புத்தகத் திருவிழாவை கொழும்புவில் துவக்கி வைத்தார்.

யுனஸ்கோ மாநாட்டில் இந்திய எழுத்தாளர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு "தமிழ் எழுத்தாளர்கள் யார்? யார்?" என்ற வெளியீட்டிற்கு பெரும் முயற்சிகலில் தன்னை ஈடுபடுத்தி வெளிக்கொணரந்தார்! இந்தக் காலகட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பில் செயலர், பொதுச்செயலர், துணைத்தலைவர், தலைவர் என்ற பொறுப்புக்களையும் வகிக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது! தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பையும் தமிழ் எழுத்தாளர் பேரவையையும் ஒருங்கிணைத்து மாநாடுகளை நடாத்தியது அனைவராலும் பாராட்டும் செயலாக மிளிர்ந்தது.
பாரதியாரின் 81வது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட தமிழக் அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றார். 1979ல் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் கல்கி நினைவு நாள் விழாவில் பேருரை நிகழ்த்தியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது! மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு அரசின் விழாக்குழுவின் சார்பில் "குழந்தை இலக்கியத்தில் தமிழ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டுப்பார்வையாளர்களைக் கவர்ந்தார்!
"குழந்தைகள் கவிஞர்" என்ற சிறப்புப் பட்டத்தை அளித்து தமிழ் எழுத்தாளர் தமிழ்வாணான் திரு.அழ.வள்ளியப்பாவைக் கெளரவித்தார்!



கவிஞருக்கு கெளரவமும், பட்டங்களும் தேடி வரத்துவங்கியது.1961ல் மேதகு குடியரசுத் தலைவர் டாக்டர்.ஜாகீர் உசேன், திரு.அழ.வள்ளியப்பா நடத்திய மூன்றாவது குழந்தைகள் இலக்கிய மாநாட்டைத் துவக்கிவைத்து கெளரவித்தார். திரைத்துறை வித்தகரும் வள்ளலுமானதிருஏவி.மெய்யப்பச் செட்டியார் திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் 25 வருட குழந்தைகள் இலக்கியச் சேவையைப்பாராட்டி விழா எடுத்து கெளரவித்தார்! 1973ல் குழதைகளுக்கான எழுத்தாளர்கள் அமைப்பு திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் 51வது பிறந்த தினத்தன்று பாராட்டிக் கெளரவித்தது! 1975ல் தமிழ் கவிஞர் மன்றம் பாராட்டிச் சிறப்பித்தது. 1976ல் மேதகு குடியரசுத் தலைவர் ·ப்க்ருதீன் அலி அகமது அவர்கள் குழந்தைகள் எழுத்தாளர் அமைப்பின் வெள்ளிவிழாவில் கலந்துகொண்டு திரு.அழ.வள்ளியப்பாவைகெளரவித்து விருது வழங்கிச் சிறப்பித்தார்! "பிள்ளை கவியரசு" மற்றும் "மழலை கவிச்செம்மல்" போன்ற பட்டங்கள் திரு.அழ.வள்ளியப்பா அவர்களைத் தேடி வந்தது! 1982ல் "தமிழ் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை மதுரை காமராஜ் பலகலைக்கழகம் வழங்கிச் சிறப்பித்தது. 1985ல் இந்தியக் குழந்தைகள் கல்விச் சபை நடத்திய விழாவில் திரு.அழ.வள்ளியப்பா அவர்களை நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு.பல் ராம் ஜாக்கர் பாராட்டிச் சிறப்பித்தார்! 1988ல் தஞ்சாவூர் தமிழ் பலகலைக் கழகம் "தமிழ் அன்னை" என்ற சிறப்பு பரிசை வழங்கிப் பாராட்டியது!1982ல் சஷ்டியப்த பூர்த்தியை பிள்ளையார்பட்டியில் வெகு சிறப்பாக திரு.அழ.வள்ளியப்பா தம்பதியர்க்கு நடைபெற்றது. இதில் பிள்ளைகள், பேரக்குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், எழுத்தாளர்கள், நலம்விரும்பிகள் என்று ஏகமாய் திரண்டு தம்பதியரை வணங்கி ஆசிபெற்றும் அளித்தும் அன்பால் திளைக்கவைத்தனர்

திரு .அழ வள்ளியப்பா அவர்களும் திரு .AVMமெய்யப்ப செட்டியாரும்


.·போர்டு அறக்கட்டளைக்காக பணியாற்றிய பிறகு 1962லிருந்து மீண்டும் இந்தியன் வங்கிப் பணிக்குத் திரும்பினார். சென்னையில் ஆழ்வார்பேட்டை, ஆயிரம்விளக்கு, ஹாரீஸ் சாலை இந்தியன் வங்கி மேலாளராகப் பணியாற்றிவிட்டு காரைக்குடி இந்தியன் வங்கியின் காரைக்குடி பகுதியின் மேலாளராகப் பணியாற்றி 1982ல் பணி ஓய்வு பெற்றார்.பணி ஓய்வுக்குப் பிறகு தனது முழு நேரத்தையும் குழந்தைகளுடைய தமிழ் இலக்கியத்திற்க்காக அரும்பாடுபட்டார். அத்தோடு கோகுலம் சிறுவர் மாத இதழில் கெளரவ ஆசிரியர் பொறுப்பையும் ஏற்று திறம்படச் செய்தார்.

திடீரென்று மரணம் நேர்ந்த1989 வரை தமது வாழ்நாளைக் குழந்தைகளுக்கான இலக்கியத்துக்காகவே பணியாற்றி மறைந்தார்.
58 தலைப்புகளில் பாடல்கள், சுய வரலாறு, நாவல்கள் மற்றும் நாடகம் என்று வெளியீடுகண்டது; 1000க்கும்மேற்பட்ட குழந்தைகள் பாடல்கள் படைத்து வெளியிட்ட பெருமை திரு.அழ.வள்ளியப்பா அவர்களையே சாரும்! "நதிகளினுடைய கதை" பகுதி ll என்ற புத்தகத்தை தேசிய புத்தக அறக்கட்டளை மொழிபெயர்த்து 14மொழிகளில் வெளீயிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது! "மலரும் உள்ளம்", "பாட்டிலே காந்தி கதை" மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளது. "நல்ல நண்பர்கள்", "பெரியோர் வாழ்விலே", "சின்னஞ்சிறு வயதில்" மற்றும் "பிள்ளைப் பருவத்திலே" தமிழக அரசின் விருதுகளைப் பெற்றது.

"வாழ்ந்தார், மறைந்தார் என்ற இயல்பைத் தாண்டி காலம்காலமாய் குழந்தைகள் வாழும் உலகில் என்றென்றும் வாழ்ந்திருக்கும் வரலாறாக இவர் நிலைத்து நிற்கிறார்; நிற்பார். வெற்றிகரமான குழந்தைகளுக்கான புதினங்களைப் படைத்த அவர் மனதளவில் குழந்தையாகவே வாழ்ந்தவர் என்பதும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்! குழந்தைகள் மகிழ்ச்சிக்காக, அவர்களின் குதூகலத்துக்காக அவர்களைக் கவர்ந்திட தன் பாட்டாலும், கதையாலும் தம் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர்! குழந்தைகள் உலகம் உலகம் இருக்கும்வரை இவரது புகழும் இந்த உலகில் இருக்கும் என்பது அய்யமில்லை!

1 comment: