Monday 4 August 2014

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு


உலகில் ஒவ்வொரு சமூகத்திற்கும் உருவான, வளர்ந்த ,தேய்ந்த வரலாறுகள் இருக்கும்.ஒவ்வொரு சமூகத்திலும் குறைகள்,நிறைகள் இருக்கும். குறைகளை எண்ணி வெட்கப்படுதலோ அன்றி நிறைகளை எண்ணி கர்வப்படுதலோ மனித அறியாமை.குறைகளும்,நிறைகளும் கொண்டவன் தானே மனிதன்.ஒரு தனிமனிதனுக்குள்ளேயே நூறு குறை,நிறை எனும் போது ஒரு சமூகத்தின் குறைகளுக்கு வெட்கப்படுவது அர்த்தமற்றது. அதனால் ஒரு சமூகம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது என் வரையில் ஒரு அறிவுத்தேடல். தமிழ் நாட்டின் ஒவ்வொரு சமூக மக்களும் ஒரு குறு நில மன்னனின் வம்சாவளிகளாக, அவர்கள் வழி வந்தவர்களாகத் தான் இருப்பார்கள் என்று என் ஐயா (தாத்தா) கூறுவார்கள்.உலக வரலாற்றைப் பாடம் படிக்கும் ஒவ்வொரு சமூக மக்களும் தங்களது வரலாற்றை அறிந்து கொண்டால் தமிழ்நாட்டின் வரலாறு கிடைத்துவிடும்..தமது பழம்பெருமைகளை அறிந்து கொண்டால் குறைகளை அகற்றி,நமது முன்னோர்களின் ராஜபாட்டையில் வழிதவறாது நாம் நடையிட இயலும். நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை நான் வலைப்பூவில் இடுகையிடுவதன் காரணம் -- நகரத்தார் மக்களின் வரலாறின்றி எங்கள் சமூக வரலாற்றை எழுத முடியாதது ஒன்று.ஒரு சமூகத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு வரலாறா? என்ற திகைப்பும்,பிரமிப்பும் ஒரு காரணம்.கிட்டத்தட்ட ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூகம் நகரத்தார்கள்.காலத்திற்கேற்ற புதிய பரிமாணமும்,எந்தச்சூழ்நிலையிலும் தமது சமூகம் வளர்த்து பெருமை காத்த இவர்களது பரிணாம வளர்ச்சியும் போற்றுதலுக்குரியது.

இவர்கள் ஆதியில் நாக நாட்டில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படும் இந்த மக்கள் கலியுகம் பிறந்து 204ம் வருடத்தில் காஞ்சி மாநகரம் குறும்பர்கள் வசம் இருந்த போது அங்கு குடியேறிருக்கிறார்கள்.கால மாற்றத்தால் குறும்பர்கள் வசமிருந்த காஞ்சி மண்டலம் தொண்டை மண்டலமானது."நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்" என்ற குறளுக்கேற்ப தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் அருமை உணர்ந்த தொண்டை மன்னன் நகரத்தார் மக்களை நன்கு உபசரித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொடுத்து தன் நாட்டிலேயே நிலைப்படுத்திக்கொண்டான்.தன வைசியர்களான இவர்கள் பொன்,ரத்தின வணிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். தொண்டை மண்டலம் உலகப் புகழ்பெற்ற வணிக மையமாகவும் நல்லாட்சி நடந்து வந்த அரசு எனவும் வரலாறு கூறுகிறது.ஒவ்வொரு புகழ் பெற்ற அரச வம்சாவளியும் மண்மூடிப்போனதற்கு மிக முக்கியமான காரணம் கொடுங்கோன்மை புல்லுருவிகள் தான். அப்படி ஒரு புல்லுருவியாக பிரதாபன் என்னும் கொடுங்கோலன் சிம்மாசனமேற நகரத்தார்களின் நிம்மதி பறிபோனது.வணிக ரீதியான அநீதிகளைப் பொறுக்க முடியாது,2108 வருடங்கள் வாழ்ந்து செழிப்பாக்கிய காஞ்சி மண்ணை விட்டு 8000 நகரத்தார் குடும்பங்களும் தெற்கு நோக்கி புறப்பட்டு சோழ நாட்டிற்கு வந்தார்கள். சோழ நாடு விவசாயத்தில் சிறந்து தொழிலில் பின் தங்கியிருக்கவே அப்போது சோழநாட்டை ஆண்ட மனுநீதிச்சோழன் என்னும் அறிவிற் சிறந்த நீதிமானானவன் நகரத்தார்களின் வருகையால் மிக்க மகிழ்ந்து வரவேற்று இவர்கள் குடியிருக்க காவிரிப்பூம்பட்டினத்தில் கிழக்கு,மேற்கு,தெற்குத் தெருக்கள் ஒதுக்கிவிடப்பட்டு அரச வம்சத்திற்கு மகுடம் சூட்டுகிற உரிமை தந்து 'மகுட வைசியர்' என்ற பட்டமும் தந்து கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.இவர்களது மாளிகையில் தங்கக்கலசம் வைத்துக்கொள்ள அனுமதி தந்து சிங்கக்கொடிவிருதும் தந்து சிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது.அரசு கஜானாக்களை விட இவர்களிடம் மிகுந்த செல்வமிருந்ததாகத் தெரிகிறது.ஒரு கலையிலோ,தொழிலிலோ நிகரற்றவர்களுக்கு அறிகுறியாக சிங்கக் கொடிவிருது தரப்படுவதும்,செல்வத்தில் யாருக்கும் நிகரற்றவர்களுக்கு அடையாளமாக தங்கக்கலசம் வைக்க அனுமதிப்பதும் அரச மரபு என்பதிலிருந்து இவர்களின் செல்வ நிலையும், தொழில் மேன்மையும் அறிந்து கொள்ள முடிகிறது.1400 வருடங்களுக்குப்பிறகு சோழ வம்சத்திலும் ஒரு புல்லுருவி நகரத்தார்களுக்கு எதிராகத் தோன்றினான். பூவந்திச்சோழன் என்னும் அந்த அரசன் நகரத்தார் சமூகப் பெண்களுக்கு தீவினை செய்யத் துணிய தங்கள் ஆண்பிள்ளைகள் 1502 பேரையும்,அவர்களது அனைத்துச்செல்வத்தையும் உபாத்தியாயராய் இருந்த ஆத்மநாத சாஸ்திரியாரிடத்தில் ஒப்புவித்து,சிசு பரிபாலனமும் மரகத விநாயகர் பூசையும் செய்விக்கச்செய்து மானம் காக்கும் பொருட்டு 8000 குடும்ப மக்களும் பிராணஹானி செய்துகொண்டார்கள் என்று 'நாட்டுக்கோட்ட நகரத்தார் சரித்திரம்' கூறுகிறது.ஆனால் ஆச்சிமார்கள் கூறுகையில் பல தேசங்களுக்கும் கொண்டுவிற்கப்போன ஆண்மக்கள் திரும்பும் முன் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டான கடற்கோள் அழிவால் நகரத்தார் மக்களை கடல் கொண்டதாகக் கூறுவார்கள். ஒரு வேளை சிறியவர்களிடம் இந்தக் கொடுமைகளைக் கூற மனம் விழையாது மாற்றிக் கூறியிருக்கலாம்.ஒரு புத்தகத்தில் படித்த மனதை விட்டு நீங்காத ஒரு கருத்து. பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.சிலப்பதிகார நாயகன் கோவலன், நாயகி கண்ணகி குடும்பத்தினர்,பட்டினத்தார் ஆகியோர் நகரத்தார் சமூகத்தினரே!கலியுகம் 3808ம் ஆண்டில் பாண்டிய தேசத்து சௌந்தரபாண்டிய அரசன் தமது அரசாங்கத்தில் நற்குடி வேண்டி சோழ மன்னனிடத்தில் வேண்ட,அப்படியே அனுப்பி வைப்பதாக உறுதியளித்து நகரத்தார் சிலரை பாண்டிய தேசம் போயிருக்கும்படி வேண்ட அவர்களோ "எங்கிருந்தாலும் நாங்கள் பிரியாதிருப்போம் என்றும்,தாங்கள் நடத்திவந்தபடி பாண்டிய மன்னனும் மன்னிணை மரியாதை தந்து,அபிமானமாய் சம்ரக்ஷணை செய்வதாய் தங்கள் முன்னால் உறுதியளித்தால் நாங்கள் போகச்சித்தமாயிருக்கிறொம்" என்று கூற சோழ மன்னன் முன் பாண்டிய மன்னன் உறுதியளித்து நகரத்தார் மக்கள் பாண்டிய தேசம் வந்தது வரலாறு.காரைக்குடி அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களில் இவர்கள் தங்கள் குடியிருப்பை அமர்த்திகொண்டனர்.இவர்கள் சைவ நெறியைக் கடைப்பிடிப்பவர்கள்.தீட்சையும்,உபதேசம் பெற்று சிவபூசை நித்தம் செய்பவர்கள்.சிவபூசை எடுத்தவர்கள் புலால் உண்ண மாட்டார்கள்.மூன்று வேளாளப் பெண்களை மணந்த நகரத்தார் காலப்போக்கில் மூன்று பிரிவாகி ஒவ்வொரு பிரிவிற்கும் அரியூர்,சுந்தரப்பட்டினம்,இளையாற்றங்குடி நகரங்களும்,ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கோவில் வீதம் சுந்தரப்பட்டினம் கோவில்,இளையாற்றங்குடிக்கோவில்,பிரான்மலைக்கோவிலும் விட்டுக்கொடுத்து கூட வந்த குருஸ்தானங்களுக்கும் க்ஷேத்திர சுவாத்தியங்களும் விட்டு,சகல மரியாதையும் பாண்டியமன்னர் செய்ததாக நகரத்தார் வரலாறு கூறுகிறது.இளையாற்றங்குடியில் வாழ்ந்த நகரத்தார் மக்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமைக்குறைவால் 9 பிரிவுகள் ஏற்பட்டு ஒரு பிரிவிற்கு இளையாற்றங்குடிக்கோவிலும் மற்ற 8 பிரிவினர் தமக்குத் தனியாக கோவில் வேண்டி பாண்டிய மன்னனிடம் வேண்ட மன்னனும் அதற்கிணங்கி 8 பிரிவினருக்கும் மாற்றூர்,வைரவன்பட்டி,இரணியூர்,பிள்ளையார்பட்டி,நேமம்,இலுப்பைக்குடி,சூரைக்குடி,வேலங்குடி ஆகிய 8 ஊர்க்கோவில்களையும் அதற்குரிய க்ஷேத்திர சுவாத்தியங்களையும் விட்டுக்கொடுத்ததாக கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 

இந்த 9 கோவில்களும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்டமான சிவ க்ஷேத்திரங்கள்.பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருள்புரிவதில் உலகப் புகழ்பெற்ற கீர்த்தியாளர்.திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பர்மா,ரங்கூன்,செய்கோன், மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மரக்கலங்களில் 'கொண்டுவிக்க'ச்சென்று, அங்கிருந்து பொன்,நவரத்தின மணிகள்,தேக்கு,அழகிய வேலைப்பாடுடைய கலைப்பொருடகள்,மங்குச்சாமான்கள்,இன்னும் எத்தனையோ பொருட்களை கப்பல்,கப்பலாகக் கொண்டு வந்து இறக்கியவர்கள் இந்த நகரத்தார் சமூகத்தினர். இந்த மக்களால் நாட்டுப் பொருளாதாரம் சிறந்தது மட்டுமன்றி இவர்கள் தொழில் கருதிச்சென்ற அயல் நாடுகளின் பொருளாதரத்தையும் பன் மடங்கு வளர்த்தவர்கள்.சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்து, சமய உணர்ச்சியை பரப்பி, புராதனக் கலைச்செல்வத்தைப் போற்றி தமிழகத்தின் பண்டையப்பெருமை,பண்பாடுகளை பாதுகாத்து கால மாறுதலுக்கேற்பத் புத்துணர்வுடனும், விழிப்புணர்வுடனும் தாமும் பொருந்திக்கொள்ளும் மனோபலம் மிக்கவர்கள்.மொழி, தேச அமைப்பு தெரியாத இடங்களில் கூட மனத்துணிச்சலுடன் கடல் கடந்து சென்று மனதில் கொண்ட காரியங்களை அற்புதமாக, சாமர்த்தியமாக சாதித்துக்காட்டியவர்கள் நகரத்தார்கள். தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் வரலாறு நாட்டவர் அனைவருக்கும் பயன்படும் ஒன்றாகும்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் செட்டியாரின் சிலை - சிங்கபூர்  

No comments:

Post a Comment