Friday 29 August 2014

லயன் சித்தி விநாயகர்` கோயில் (விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு )

சிங்கப்பூர் நகரில் நகரத்தார்கள் பராமரிப்பில் உள்ள ஆலயங்கள் என்றால் இரண்டு உள்ளன .
 ஒன்று அண்ணன் கணபதியின் ஆலயமும்
 இரண்டாவது தம்பி சுப்பையன் ஆலயம் .

இந்த இரண்டு ஆலங்களுமே மிகவும் பிரசித்தம் . அண்ணன் கணபதிக்கோ சைனா டவுன் என்னும் இடத்தில லயன் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்கின்றார் .

 லயன் சித்தி விநாயகர் இந்த பெயர் விளக்கம் இதோ சித்தி விநாயகர் சித்தி என்னும் சொல்லுக்குக் கைகூடுதல்வெற்றிவீடுபேறுஅற்புத ஆற்றல் எனப் பல பொருள்உண்டு. இவற்றை எல்லாம் வழிபடும் அடியார்களுக்கு விநாயகப் பெருமான் வழங்குவதால் அவர் சித்தி விநாயகர் என அழைக்கப் படுகிறார்.லயன் என்பது ஆங்கில சொல் தமிழ் வரியில் குறிப்பிடபட்டுள்ளது . வரலாற்று அடிப்படையில் முதலில் இந்தக் கோயில் சிப்பாய் லைனில் (Sipay Line) இருந்து வந்ததால் `லயன்என்னும் அடைமொழி வந்தது எனலாம்.

செட்டிமக்கள் வேல் வைத்து பூசை போட்டும் சுப்பையனுக்கே கோயில் கட்டி வழிபடுவதுதானே வழக்கம் . இங்கு எப்படிஇந்த சித்தி விநாயகர் கோயில் வந்தது . இந்த கோயில் உருவான வரலாற்றை இங்கு பார்போம் .

ஆலயத்தின் தற்போதைய தோற்றம் 

ஆலயத்தின் 193௦ களில் இருந்த தோற்றம் .தைபூசத்தின்போது அண்ணனை
காண தம்பி வெள்ளித் தேரில் வந்த காட்சி . ஆலயத்தின் முன் வெள்ளித் தேர் .


தல வரலாறு : 

சிதம்பரத்தில் சிவாநுபூதி பெற்ற திரு. பொன்னம்பல சுவாமிகளால் இங்குள்ள சித்தி விநாயகர் உருவம் நிறுவப்பெற்றது. சுவாமிகள் இல்வாழ்க்கையில் இருந்தவர். பட்டாளத்தைச் சேர்ந்தவர்.  சிங்கப்பூருக்கு வந்த இந்தியப் பட்டாளத்தில் இவரும் ஒருவராக வந்தார் அப்போது அவர் வருகையில் தம்மோடு கையில் ஒரு விநாயகரையும் கொண்டு வந்தார் . தாம் பூசை செய்வதற்காக  அந்த விநாயகர் சிலையை ஒரு அரச மரத்தடியில் வைத்து பூசை செய்து வந்தார் . கோவிலை அடையச் சிப்பாய் லைனிலிருந்து ஒரு நடைபாதை உருவாக்கப்பட்டது. கோயிலுக்கு அருகில் ஒரு மருத்துவமனையும் இருந்தது இந்த கோயிலுக்கு அருகில் அருகில் ஒரு சிறைச்சாலையும் இருந்தது . முதலாம் உலகப்போரின் இறுதியில் கோயிலுக்கு தகரக்கொட்டகையும் ஒரு நாகர் சிலையும் நாமமும் (திருமண் ) அமைக்கபட்டது  இந்த கோயிலுக்கு அன்றாட வந்து வழிபட்டோர் மருத்துவமனை ஊழியர்களளும் சிறைச்சாலை பணியாளர்களும் ஆவர் .இப்படியாக தினம் பூசை செய்து வழிபட்டு வந்த பொன்னம்பல சாமிகளுக்குஅவர் உத்தியோக மாறுதலில் இந்தியா செல்ல நேர்ந்தது. அப்போது அவர்  விநாயகர் உருவத்தை எடுத்துச் செல்லாமல் தான் வழிபட்ட விநாயகரை நகரத்தார்களிடம் ஒப்படைத்துச் செல்ல விரும்பினார். முதலில் நகரத்தார்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தை அணுகுமாறு  பொன்னம்பல சுவாமிகளிடம்  கூறினர். இந்து அறக்கட்டளை ஆர்வம் காட்டாததாலும், சுவாமிகளின்  விடாப்பிடியாக இருந்ததாலும் கோவிலை நகரத்தார்கள் ஏற்று அங்குப் பூசை நடத்த ஒரு பண்டாரத்தை நியமித்தனர்
மூலவர் லயன் சித்தி விநாயகர்  


1920களின் தொடக்க காலத்தில் மருத்துவமனை விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் தேவைப்பட்டதால் அரசாங்கம் இக்கோயில் நிலத்தை எடுத்துக்கொண்டு ஒரு சிறு தொகை கொடுத்தது.இந்த தொகை கொண்டு  நகரத்தார்கள் இப்போதைய இடத்தில் நிலத்தை வாங்கிக் கோயிலைப் பெரும்பொருட் செலவில் கட்டி முடித்தனர்.

வாங்கிய இடத்தில கோவில் கட்டத் தொடங்கியதும் மருத்துவ மனை நிலத்தில் இருந்த கோவிலில் உள்ள விநாயகரின் திருவுருவம்  சற்று  சிதைந்தும் காணப்பட்டது. குறையுள்ள சிலையைக் கருவறையில் வைப்பது ஆகமத்திற்கு ஏற்புடையதல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே முறையாகக் கருங்கல்லில் செய்த விநாயகர் சிலையை இந்தியாவிலிருந்து கொண்டு வர அவர்கள் ஏற்பாடு செய்தனர். இருப்பினும் குரோதன ஆண்டு  வைகாசித் திங்கள் 19ஆம் நாள் (1-6-1925)இல் நடைபெற்ற திருக்குட நீராட்டுக்கு முன்னர்ஆகமத்தில் கூறியதைப் போலப் பழைய சிலையைக் கடலில் இடக்கூடாது எனச் சிலர் கருத்துரைத்தனர்.  அவ்வாறு செய்தால் சன்னியாசிக்குக் கொடுத்த வாக்கை மீறுவதாக அமையும் என அவர்கள் கருதினர்.

புதிய சிலையை மூலவராகப் பிரதிஷ்டை செய்யும் அதே வேளையில்அதற்கு முன்னால் கர்ப்பகிரகத்தில் பழைய சிலையை வைத்து வழிபடுவது என ஒரு சமரச முடிவு காணப்பட்டது. அதுகமட்டுமல்லகோவிலின் பழைய இடத்தில் இருந்த நாகமும் ``ராம நாமமும்`` கருவறைக்குள்ளேயே வைக்கப்பட்டன. முருகப்பெருமானைக் குறிக்கும் வகையில் ஒரு வேலும் அதனுடன் வைக்கப்பட்டது. சிப்பாய் லைன்சில் கோவில் அமைந்திருந்ததால் அதனை லைன் சித்தி விநாயகர் என்று அழைத்து வரலாயினர்.
உற்சவ மூர்த்தி வெள்ளி முஷிக வாகனத்தில் 

1. விநாயகர் கிட்டங்கியில் இருந்து இங்கு வந்தவர் .
2. உள்ள விநாயகர் பொன்னம்பல சுவாமிகளால்கொடுத்த விநாயகர் இந்த சிலை சற்று பின்னப்பட்டதால் இவர் நித்திய வெள்ளிக் கவசதாரி.
3. பெரிய மூர்த்தி மாற்றாக கோயில் கட்டியபோது 
1925ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மூர்த்தி .

வெள்ளி முகம் சார்த்தப்பட்டு கந்தனாகவே காட்சி தரும் வேல் 

நாகார் 
தைபூச நாளில் டாங்க் ரோடு தண்டபாணி கோயிலில்நின்று
 பூசையை ஏற்கும் வேல் இதுவே

ராம நாமம் 



1824ஆம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூருக்கு வர்த்தகம் செய்ய வந்த நகரத்தார்கள் தங்கள் வட்டித் தொழிலை நகரத்தின் மத்தியாக விளங்கிய மார்க்கெட் ஸ்திரிட்டில் நடத்தி வந்தார்கள். `கிட்டங்கிகள்`` என்னும் அந்தத் தொழில் மனைகளில் வட்டித் தொழிலை நடத்திய செட்டியார்களில் சிலர் தாயகத்திலிருந்து கொண்டு வந்த சுவாமிகளின் சிறு சிலைகளை வைத்து வழிபட்டு வருவது வழக்கமாக இருந்துவந்தது.. அதற்கேற்ப மார்க்கெட் ஸ்திரிட் 38ஆம் எண் கிட்டங்கியில் விநாயகர் சிலை ஒன்று வைத்து வழிபாடு செய்யப்பட்டுவந்தது. மார்க்கெட் தெரு கிட்டங்கிகளை அரசாங்கம் பற்றுமானம் செய்தபோது (1979-80) இந்தச் சிலை தேங் ரோடு 15ஆம் எண் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த வீடும் தெண்டாயுதபாணி கோயில் திருப்பணிக்காக எடுக்கப்பட்டபோது  அந்தச் சிலையை லயன் சித்தி விநாயகர் கோயிலில் கொண்டுவந்து வைப்பதென நகரத்தார்களால் முடிவுசெய்யப்பட்டது. அதற்கேற்ப அச்சிலை மூன்றாவது பிள்ளையாராகக்  கருவறையில் 1980ஆம் ஆண்டில் வைக்கப்பட்டது. 

      சிறப்புமிகு விநாயகர்:


      இங்கு   விநாயகர் திருவுருவம் மூன்று ஒன்றன் பின் ஒன்றாக உள்ளது  முருகப்பெருமான் உருவாக  வேல் ஒன்றுநாகர் மற்றும் இராமர் நாமம் ஒன்று ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. மேலும் விநாயகர் திருமுன்னர் பெருச்சாளி உருவமும் பலிபீடமும் உள்ளன. அனுமன் கற்சிலை ஒன்று (சிறியது)  இராமநாமம் அருகில் உள்ளது.  
கும்பாபிஷேகம் பற்றிய தகவல்களை கூறும் கல்வெட்டு 

விநாயகர் திருவுருவம் மூன்றில் பெரியதாகவும் சுவற்றோரமாகவும் இருக்கும் கல் திருமேனி நகரத்தார்கள் இக்கோயில் எழுப்பிய காலத்தில் ஏற்படுத்திய ஒன்றாகும். அடுத்து இருக்கும் விநாயகர் உருவம் தான் பழைய கோயிலில் இருந்து வந்த உருவமாகும். இதனை அடுத்து இருக்கும் விநாயகர் உருவம்தான் மார்க்கெட் ஸ்திரிட்   38ஆம் எண் கிட்டங்கியில் இருந்து கொண்டு வந்து வைக்கப்பட்டதாகும். இப்போது இந்தக் கோயிலில்  வழிபடுவோர் மூன்று விநாயகப் பெருமானை ஒரே நேரத்தில் வழிபடும் பெரும் பேற்றினைப் பெறமுடியும். அறம்பொருள்,இன்பம் ஆகிய மூன்றினையும் சங்கத் தமிழ்  மூன்றினையும் (இயல்இசை,நாடகம்) தரும் வகையில்  மும்மூர்த்திகள் உருவில் இம்மூர்த்தங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

 நகரத்தார்கள் கடல் கடந்து சென்ற இடமெங்கும்  தண்டாயுதபாணி கோயிலை எழுப்பி வேல் வழிபாடு செய்து வந்தனர். வேல் என்பது வெற்றியின் அடையாளம். ஞானத்தின் அறிகுறி. ஆழ்ந்து அகன்று நுட்மாக விளங்கும் அறிவின் அடையாளச் சின்னம் முருகனின் வேல் .இங்கு செம்பு உலோகத்தில் முருகனின் வடிவான வேல் வைத்து பூசைகள் செய்யப்படுகின்றது .

மேலும் இந்த வேல் தான் தைப்பூசத்தில் வெள்ளி ரதத்தில் தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்று தைப்பூச நாளன்று ஆயிரக்கணக்கான பாற்குட நீராட்டுக்குரியதாக விளங்கும் சிறப்புடையதாகும்.  தைப்பூசத்திற்கு முதல் நாளிரவு வெள்ளி ரதத்தில் முருகப்பெருமான் திருவுருவத்துடன் பிள்ளையார் கோயில் பண்டாரம் இந்த வேலைத் தாங்கி வரும் காட்சி ஓர் அற்புதக் காட்சியாகவே அமையும். இந்த வேலுக்குச் சிறப்பு நாட்களில் வெள்ளி முகத்துடன் கூடிய அலங்காரமும் செய்யப்பட்டு முருகனாகவே காட்சி அளிக்கும் மாட்சியும் போற்றத் தக்கதாகும்.

பிள்ளையாருக்கு அருகில் நாகர் திருவுருவம் வைப்பது தமிழகத்தில் மரத்தடிக் கோயில்களில் இருக்கும் ஒரு மரபாகும்.
இங்கு ஒரு இராமனின் திருநாமம் உள்ளது இதில் வெண்பகுதி இராமனின் திருவடிகளையும் சிவப்புப்பகுதி சீதையையும் குறிப்பதாக இங்கே உள்ள திருநாமத்தைக் கருதி வழிபடப்படுகிறது 

லயன் சித்தி விநாயகர்


கோயிலின் சிற்பச் சிறப்பு :

மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு இணங்க இந்த கோயில் சிறிது என்றாலும் அமைப்பும் வேலைப்பாடுகள் அதிகம் .கோயில் இராஜகோபுரம் இப்போது ஐந்துநிலை அடுக்குக் கொண்டதாகும்.  40 அடி உயரத்தில் பெரிய நுழைவாயிலுடன் உள்ளது. கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் விநாயகர் திருவுருவங்களும்மேற்குப் பகுதியில் விஷ்ணு தொடர்பான உருவங்களும்தெற்குப் பகுதியில் தெட்சிணாமூர்த்தி முதலிய சிவன் தொடர்பான திருவுருவங்களும் வடக்குப் பகுதியில் முருகன் தொடர்பான உருவங்களும் வண்ணம் தீட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுரம் கிழக்கு முகம்  கும்பாபிஷேகதின் போது 

கோபுரத்தின் தெற்கு முகம் 


மேலும் கோயிலுள்ளே இருக்கும் 16 தூண்களில் 16 கணபதி திருவுருவங்கள் வண்ணக் கோலத்துடன் வைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளி அமைப்பிலுள்ள கோயில் கட்டடத்தைத் தாங்கி நிற்கும்  இத்தூண்களிலுள்ள16 கணபதிகளும் வழிபடும் பக்தர்களுக்கு 16 பேறுகளையும் தருவர் எனக் கருதலாம்.  1. பாலகணபதி .2.தருண கணபதி 3. பக்தகணபதி 4. வீரகணபதி 5. சக்திகணபதி, 6.துவிஜ கணபதி 7. சித்தி கணபதி 8. உச்சிஷ்ட கணபதி 9.விக்னகணபதி 10. க்ஷிப்ரகணபதி 11. ஹேரம்ப கணபதி 12. லக்ஷ்மிகணபதி 13. மஹாகணபதி 14. விஜய கணபதி 15.நிருத்த கணபதி 16. ஊர்த்துவ கணபதி என்பவை இந்த 16 கணபதி உருவங்கள் கோயிலைச்சுற்றுப் புறகாரம் வருவார் கண்களில்தென்படும் .




தினசரி பூசை :

இங்கு சித்தி விநாயகருக்கு நான்கு கால பூசைகள் நிகழ்த்தப்படுகிறது .காலையில் 7.30 மணிக்குக் காலசந்தி பூசையும்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூசையும்,மாலை 5.30 மணிக்கு சாயரக்ஷை பூசையும் நடைபெறுகிறது இந்த காலங்களுக்கு முன்பு அபிசேகம் அலங்காரம் உண்டு . இரவு 8.30 மணிக்குஅர்த்தசாம பூசையோடு  நடை சாத்தப்படும்.
இங்கு பூசை வைபவர்கள் பண்டாரர்களே இது தவிர சகஸ்ரநாம அருச்சனைகணபதிஹோமம் முதலியவற்றைச் செய்ய இரண்டு சிவாச்சாரியார்களும் உள்ளனர் . வெள்ளிகிழமை , சதுர்த்தி , பௌர்ணமி தமிழ் மாதப்பிறப்பு , வருடப்பிறப்பு போன்ற தினங்களில் விநாயகருக்கு சந்தனகாப்பு , வெள்ளி அங்கி சாத்தப்பட்டு . சிறப்பு பூசைகள் நிகழ்கின்றது இந்த கோயிலுக்கு என்று இரண்டு நாதஸ்வரக்காரர்கள் உள்ளனர் . 

தங்க கவசத்தில் சித்தி விநாயகர் 



விழாச் சிறப்பு 
      ஆவணி மாதத்தில் வரும் விநாயக சதுர்த்தியே இந்தக் கோயிலில் பெருவிழாவாக உள்ளது. அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உற்சவ மூர்த்தி என ஒன்று இங்கு இல்லாததால் மூல மூர்த்திக்கே எல்லாச் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படும். அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி அன்று நாள் முழுதும் சிறப்புப் பூசைகள் இடம்பெறும். வருடப்பிறப்புதீபாவளிபொங்கல்சிங்கப்பூர் தேசியநாள் முதலிய நாட்களிலும் சிறப்பு வழிபாடு உண்டு.  மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி பூசை நாள்தோறும் காலை 5.30 மணிக்கு நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி உண்டு.
தைப்பூசத்தின் போது தைப்பூசத்திற்கு முதல்நாள் தேங்ரோடு கோயிலில் இருந்து ரதத்தில் முருகப்பெருமான் காலையில் புறப்பட்டு இங்கு வந்து சேர்வார். மாலை வரை இங்கிருந்து வழிபாடுகள் நடத்தப்பட்ட பின்னர் இந்தக் கோயிலில் உள்ள வேலை இந்தக் கோயில் பண்டாரம் தாங்கி எடுத்துவர இரதத்தில் தேங்ரோடு கோயிலுக்கு நகரத்தார் காவடிகள்பக்தர்கள் புடைசூழ  நகர் வலமாக வந்து சேர்வார். நகரத்தார்கள் காவடிகள் கட்டி இங்கே வைத்துக் காவடிப் பூசை செய்து இரதத்துடன் காவடி எடுத்துச் செல்வார்கள். இது இந்தக் கோயிலில் நடைபெறும் ஒரு முக்கியமான விழா நிகழ்ச்சியாகும்
.


நகரத்தார் போற்றும் சிறப்பு


நகரத்தார்கள் பொதுவாக விநாயகரை வணங்காமல் எந்த நற்காரியமும் செய்யமாட்டார்கள். பிள்ளையார் சுழி போடாமல் எதனையும் எழுத மாட்டார்கள்.பிள்ளையார்பட்டி என்னும் கோயில் பிரிவு என ஒன்றே நகரத்தார் கோயில் பிரிவுகளில் உள்ளது. சிங்கப்பூரிலுள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்கள் லயன் சித்தி விநாயகரிடம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பது அவர்களின் கணக்குப் புத்தகங்களில் முதல் வரியைப் பார்த்தாலே தெரியும். லயன்சித்தி விநாயகர் வரவு என்று தான் கணக்கு ஆரம்பமாகும். புதிய தொழில்கள் தொடங்கும் போதும்சிறப்பு நாட்களில் கணக்கு எழுதும் போதும் இறைவன் பெயரால் கணக்கில் வரவு வைப்பது செட்டியார்களின் தொன்று தொட்டு வரும் மரபாகும். சிங்கப்பூரிலுள்ள நகரத்தார்கள் லயன் சித்தி விநாயகர் பெயரால் வரவு வைத்த பிறகுதான் அவரவர் வழிபடும் தெய்வங்களின் பெயரால் வரவு வைப்பார்கள்.
மேலும் வெளிநாட்டுக்குப் போகும் போதும்திரும்ப வரும்போதும் முதலில் லயன் சித்தி விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற பணிகளை மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். சிங்கப்பூர் நகரத்தார் மன்றம் தொடங்கிய! பின்னர் (1980) சில ஆண்டுகள் நகரத்தார்களுக்கே உரிய பிள்ளையார் நோன்பு விழா இக்கோயிலில் தான் நடைபெற்று வந்தது. மேலும் சில ஆண்டுகள் வார வழிபாடும் ஞாயிறு தோறும் நடைபெற்றது.
தெண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் எந்தச் சிறப்பு நிகழ்ச்சியும்  முதலில் லயன் சித்தி விநாயகர் கோயில் வழிபாட்டிற்குப் பின்னரே நடக்கும்.  வருடப்பிறப்புதிருக்கார்த்திகைபொங்கல்தீபாவளி முதலிய நாட்களில் முதல்வழிபாடு லயன் சித்தி விநாயகருக்குத் தான்.


சிறப்பு பிரார்த்தனை:

இகோயிலில் வேலைக்குச் செல்லும் அன்பர்கள் நாள்தோறும் அல்லது திங்கட்கிழமை தோறும்இக்கோயிலில் வந்து வழிபாடு செய்கின்றனர். வாரந்தோறும் வருவதை வழக்கமாகக் கொண்டோர் பலர் உள்ளனர். பக்தர்கள் பலர் 108 சுற்று(புறகாரம்) வழிபாடியற்றி வேண்டும் வரங்களைப் பெற்றுள்ளனர். இவ்வாறே 16, 51, 108 என்று சிதறுகாய் உடைப்போரும்  பலர் உள்ளனர். மாதந்தோறும் கூட்டாகச் சேர்ந்து கணபதி ஹோமம் செய்தலும்அன்னதானம் வழங்கலும் சந்தனக்காப்பு வழிபாடு செய்தலும் வரவர அதிகமாகவே நடைபெற்று வருகின்றன. அன்பர்கள் பலர் இவ்விநாயகப் பெருமான்அருளால் வழக்குகளில் வெற்றிபெற்றது பற்றியும் வணிகம்தொழில்வேலை ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டது பற்றியும் குடும்ப வாழ்வு வளம் பல உடையதாய் விளங்கியது பற்றியும் சொல்லுகின்றனர் .சீனர்கள் பலர் வந்து வழிபாடு செய்து பலன் பெற்றும் வருகின்றனர்  வியாழன்வெள்ளி,ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் காலை மாலை இருவேளையும் மிகுதியாக இருக்கும்.


கோயிலின் தோற்றம் :

ஆலயத் தோற்றம் 

ஆலயத்தின் முழு தோற்றம் 

ஆலயத்தின் உட்புற தோற்றம் மற்றும் வேலைப்பாடுகள் 

லயன் சித்தி விநாயகர் சந்நிதி 

சித்தி விநாயகர் கருவறை கோபுரம் 

ஆலய  வெளிப்புற தோற்றம் 
ஆலய கோபுரம் அருகில் உள்ள கோயில் விழா மண்டபத்தின் மேல் இருந்து எடுத்த காட்சி 


கோயிலின் முக்கியத்துவம் :

சௌத்பிரிட்ஜ் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோயில்தான் சிங்கப்பூரில் மிகப் பழமையான கோயில் இக்கோயிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தீமிதித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது தீ மிதிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிக்கும் முதல் நாள் இரவு இந்தக் கோயிலில் வந்து விநாயகரை வழிபட்டு விரதம் நன்கு இடையூறின்றி நிறைவேறப் பிரார்த்திப்பார்கள்.  மேலும் தீ மிதியை ஒட்டி மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்படும் திரௌபதி அம்மன் வெள்ளி ரதம் முதலில் இந்த விநாயகர் கோயிலுக்கு வந்து சிறப்புச் செய்யப்படுவது சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிராங்கூன் ரோட்டிலுள்ள வடபத்திர காளியம்மன் கோயிலிலுள்ள இராமர் இராம நவமி அன்று இரதத்தில் இந்தக் கோயிலுக்கு வருவது சென்ற இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது










No comments:

Post a Comment